மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தில் வ.அ.இராசரத்தினம் நூற்றாண்டு விழா

நூற்றாண்டு விழா மட்டக்களபுத் தமிழ்ச் சங்கத்தில்.....
 

வ.அ.இராசரத்தினம் அவர்களின் நூற்றாண்டு நினைவாக,  மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கமும் அலை ஓசைப்பதிப்பகமும் இணைந்து நடாத்திய வ.அ. இராசரத்தினத்தின் “இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில்” சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மற்றும் வ.அ.இராசரத்தினக் காவியம் - நெடுங்கவிதை, தேடல்கள் - கவிதைத் தொகுப்பு வெளியீட்டு அறிமுக நிகழ்வானது மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் 11.01.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.





இந் நிகழ்வுக்கான அழைப்பு அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியை புளோரன்ஸ் பாரதி கென்னடி அவர்களும் மட்டக்களப்பு கல்வி வலய பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி நிதர்ஷினி மகேந்திரகுமார் அவர்களும் இலக்கிய, அரசியல் மனிதநேய செயற்பாட்டாளர் ஜனாப் சிராஜ் மஷ்ஹீர் அவர்களும் எழுத்தாளர், இலக்கிய அரசியல் செயற்பாட்டாளர் திருமிகு செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 

காலை 10.15 மணியளவில்  மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் இறைவணக்கத்தினைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தானது கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியா ஜெதீஷ்வரன் அவர்களால் இசைக்கப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து வ.அ.இராசரத்தினம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க கணக்காய்வாளர் திரு.இரா.புவிராசசிங்கம் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அடுத்து கலாநிதி வசந்தி நேரு அவர்களின் நெறியாள்கையில் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. அடுத்த நிகழ்வாக தலைமையுரையானது , மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களால்  நிகழ்த்தப்பட்டது. அடுத்து நூல் வெளியீட்டுரை அருட்பணி அ.அ.நவரெத்தினம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னர் நூல் வெளியீடு இடம்பெற்றது. அடுத்து “இற்றைத்திங்கள் இவ் வெண்நிலவில்” சிறுகதை தொகுப்பு நூல் மதிப்பீட்டுரை விமர்சகரும் எழுத்தாளரும் இலக்கியச் செயற்பாட்டாளருமான திருமதி.றூபி வலன்ரீனா பிரான்சிஸ் அவர்களாலும் 








“வ.அ.இராசரத்தினக்காவியம்” நூல் நயவுரை எழுத்தாளரும் இலக்கிய , சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான ஜனாப் றியாஸ் அகமட் அவர்களாலும் தேடல்கள் கவிதை தொகுப்பு நூலிற்கான நயவுரை கவிஞரும் விவாதக்கலைஞரும் இலக்கிய ஆர்வலருமான வைத்தியர் திருமிகு இரா.முரளீஸ்வரன் அவர்களாலும் நிகழ்த்தப்பட்டது.அதன் பின்னர் நிகழ்விற்கான அழைப்பு அதிதிகளின் உரை இடம்பெற்றது. அதனையடுத்து ஏற்புரையும் நன்றியுரையும் திருமதி.அன்ரனி வசந்தி அவர்களால் நிகழ்த்தப்பட்டது இதன் போது அவர், மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இந் நிகழ்வினை  மட்டக்களப்பு கல்வி வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமிகு அ.ஜெகநாதன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.நிகழ்வுகள் யாவும் மதியம் 12.30 மணியளவில் இனிதே நிறைவுற்றது.

பிரதீஷ்காந்